சென்னை: பொதுப்பயன்பாடு என்ற பெயரில் உரிய சட்டவழிமுறைகளைப் பின்பற்றாமல் தனிநபரின் இடத்தை ஆக்கிரமித்து, அதற்கு இழப்பீடு வழங்காத விவகாரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டாட்சியர் உள்ளி்ட்ட 5 அதிகாரி கள் மீது நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு எஸ்.பி.-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் எம்.ஆர்.வசந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், தனக்கு சொந்தமான ஆயிரத்து 318 சதுர மீட்டர் பட்டா நிலத்தை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நீர்வழிப்பாதையாக மாற்றியுள்ளதாகவும், எனவே தன்னுடைய நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டுமென கோரியிருந்தார்.
அதன்படி இந்த வழக்கை கடந்தாண்டு விசாரித்த நீதிபதிகள், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிநபரின் நிலத்தை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்றும், அந்த நிலம் தற்போது பொதுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு விட்டதால் நிலத்தின் உரிமையாளரான மனுதாரருக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் உரிய இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டுமென கடந்தாண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி அந்த நிலத்துக்கு தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் ரூ.2 கோடியே 90 லட்சத்து 64 ஆயிரத்து 375-ஐ நிர்ணயம் செய்து அதற்கு நிர்வாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாம்பரம் வட்டாட்சியர் கடந்தாண்டு ஏப்ரலில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பி.செங்கோட்டுவேல், அந்த நிலத்துக்கான இழப்பீட்டுத்தொகையை நிர்ணயம் செய்து ஓராண்டு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த தொகையை அதிகாரிகள் மனுதாரருக்கு வழங்கவில்லை, என குற்றம் சாட்டினார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஹஷ்வந்த் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், அதிகாரிகளி்ன் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம். பொதுப்பயன்பாடு என்ற பெயரில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தது முதலில் தவறு.
பின்னர் அந்த நிலம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது எனக்கூறியதால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அந்த நிலத்துக்கு உரிய இழப்பீட்டை மாதக்கணக்கில் வழங்காமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகளின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
எனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டாட்சியர், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது மனுதாரர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யிடம் தனிநபர் புகார் அளி்க்க வேண்டும்.
அந்தப்புகார் மீது எஸ்.பி. நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு எஸ்.பி. இன்று (செப்.3-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.