சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெயசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது தூத்துக்குடியில் சூப்பர் கிரிட் தெர்மல் நிலையம் அரசு, தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேபோல், எண்ணூர் அனல் மின் நிலையமும் தனியார், அரசு பங்களிப்பு மூலம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா போல கேப்க்ஸ் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தாமல், மின்விநியோக பணிகளையும், மின் கணக்கீட்டு பணிகளையும் - தரவுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் டோடெக்ஸ் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார வாரியத்தில் ஐந்தாண்டு ஒப்பந்த முறையில் 10 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மின்சார வாரியம் தனியார் மையத்தை நோக்கி செல்வதை உணர்த்துகிறது.
இந்த அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும். மின் துறையை தனியார் பாதைக்கு கொண்டு செல்லும் முடிவு கண்டிக்கத்தக்கது. எனவே, அரசின் இந்த அறிவிப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லையெனில், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு ஜெயசங்கர் கூறியுள்ளார்.