தமிழகம்

அரசு பணத்தில் திமுக ஓட்டு சேகரிப்பதை தடுக்க தேர்தல் விதிகளை உடனே அமல்படுத்துக: புதிய தமிழகம்

மோகன் கணபதி

சென்னை: அரசு பணத்தில் திமுக ஓட்டுச் சேகரிப்பதை தடுத்து நிறுத்த, தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அராஜகத்தால் தமிழக மக்கள் அனைவரும் அளவிட முடியாத அதிருப்தியில் உள்ளனர்.

பட்டிதொட்டியெங்கும் பெருகிவிட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், தடையற்ற கனிம வளக் கொள்ளை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தலைவிரித்தாடும் மிதமிஞ்சிய ஊழல்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் போன்ற சாதாரணப் பணிகளுக்கே லட்சக்கணக்கில் பேரம்; படித்த இளைஞர்களுக்குப் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றின் அதீத உயர்வு, தாறுமாறான விலைவாசி உயர்வு; அடிப்படை வசதிகளின்றிப் பெரும்பான்மையான மக்கள் தவிப்பு என அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியின் அவலத்தால் அல்லப்பட்டு வருகின்றனர்.

          

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பராமரிக்காமல், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன; குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த ஆட்சியின் குறைபாடுகளும், முறைகேடுகளும், மக்களின் அதிருப்தியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்ற சூழலில் அதனை மடைமாற்றம் செய்வதற்காக, கடைசி நேர, கால தாமத, காலாவதியாகிப் போன ஒரு நடவடிக்கையைத் தேர்தல் நேரத்தில் திமுக அரசு எடுத்துள்ளது. அதுதான் 5,000 ரூபாய் உரிமைத் தொகை அறிவிப்பு.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வழங்கப்பட வேண்டிய 3,000 ரூபாயுடன், 'கோடைக்காலத் தொகை' என்ற பெயரில் 2,000 ரூபாயைச் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர். மழை, புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை வழங்குவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், 'கோடைக்கால நிவாரணம்' என்று ஒரு புதிய கரடியை விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதை மூடிமறைக்க, வார்த்தை ஜாலங்கள் மூலம் அரசுப் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இந்த அறிவிப்பு எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். இது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியைக் குறைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது; மகளிர் மனமும் மாறாது.

தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, அரசுப் பணத்தைத் தவறான முறையில் தாரை வார்ப்பதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கிறது? நீதிமன்றங்களும் மத்திய அரசும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

திமுக அரசு இதுபோன்ற முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தான் ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற எங்களது புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாட்டில், ”தமிழ்நாட்டில் 2026 - சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி விரும்புகிறது.

ஆட்சி - அதிகாரம், பண பலம், சாதி பலம் மற்றும் அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிடத் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. எனவே, வாக்குப்பதிவு தேதிக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும்; தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்” என்று 19 வது தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனால், மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாகவே இன்று திமுக இத்தகைய மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளது.

ஜனநாயகப் பூர்வமாகத் தேர்தலை எதிர்கொள்ளாமல், ஏமாற்று அரசியலில் ஈடுபடும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தலையொட்டி இன்னும் திமுகவால் அரங்கேற்றப்பட இருக்கின்ற முறைகேடுகளைத் தடுத்து, நியாயமான தேர்தலை நடத்திட, உடனடியாகத் தேர்தல் விதிமுறைகளைத் தமிழகத்தில் அமலுக்குக் கொண்டு வரவும், அனைத்து அரசு நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT