சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், அமைச்சரவை செயலகம் ஆகியவை சேவா தீர்த்த வளாகத்தில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் முன்பு வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன.

கர்த்தவ்யா பவன் (கடமை மாளிகை) 1 & 2-ல் நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ளன.

இந்த திறப்பு விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்லை இந்த திறப்பு விழா குறிக்கிறது. நவீன, திறமையான, அணுகக்கூடிய, குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகச் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பத்தாண்டுகளாக, பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் மத்திய நாடாளுமன்றத் கட்டிடம் அமைந்துள்ளப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன.

அத்துடன், அந்தக் கட்டிடங்களும் பழமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தன. உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் காரணமாக, செயல்பாட்டு திறமையின்மை, ஒருங்கிணைப்பு சவால்கள், அதிகரித்து வரும் பராமரிப்பு செலவுகள், உகந்த பணிச் சூழல் இல்லாத நிலைக்கு வழிவகுத்தது. புதிய கட்டிட வளாகங்கள் நவீன முறையில், எதிர்காலத்திற்கு ஏற்ப, தேவையான வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளன.

இரண்டு கட்டிட வளாகங்களிலும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொது இடைமுக மண்டலங்கள், மையப்படுத்தப்பட்ட வரவேற்பு வசதிகள் உள்ளன. மேலும், இந்த வளாகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், நீர் பாதுகாப்பு அம்சங்கள், கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கி உள்ளது.

கட்டிட வளாகங்களில் நவீன கட்டுப்பாட்டு அமைப்புகள், கண்காணிப்பு வலையமைப்புகள், மேம்பட்ட அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற விரிவான பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான, எளிதில் பயன்படுத்தக்கூடிய சூழல் அமைப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
வங்கதேச தேர்தல் முடிவுகள் | ‘இந்தியாவுக்கு நன்றி... இரு தரப்பு உறவு வலுப்படும்’ - பிஎன்பி நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in