அரியலூர்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார் 4-வது முறையாக தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கியது.
அரியலூர் மாவட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்பு குழுக்களும், 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாக்காளர்களுக்கு ஏதேனும் பணம் பட்டுவாடா செய்ய சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா, தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா ? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கரின் கார் இன்று (ஏப்.8) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது அரியலூர் அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் காரை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
மேலும், சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் காரை தொடர்ந்து செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். ஏற்கனவே, ஏப்.1, ஏப்.5 தேதிகள் என இந்த மாதம் மட்டும் இரு முறையும் அமைச்சர் சிவசங்கரின் கார் தேர்தல் பறக்கும் படையினரிடம் சோதனைக்கு சிக்கியது. அப்போதும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கிடைக்கவில்லை. மொத்தம் இதுவரை 4 முறை அமைச்சரின் கார் பறக்கும் படையினரின் சோதனை சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.