சென்னை: தமமுக, மமக உள்ளிட்ட கட்சிகளை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத, செலவு கணக்கை தாக்கல் செய்யாத, தேர்தல் ஆணைய விதிகளை மீறிய 474 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2025 செப்.19-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த மனுவில், ‘தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டதை கருத்தில் கொள்ளாமல், பதிவு பட்டியலில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எஸ்.பிரபாகரன், என்.எல்.ராஜா, ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் வழக்கறிஞர் அபிஷா ஐசக், ஏ.ஜான் வின்சென்ட், கே.கவுதம் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். ‘6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வகை செய்யும் விதிகள் கடந்த 2014-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பாக தொடங்கப்பட்ட கட்சிகளுக்கு அந்த விதிகள் பொருந்தாது. தவிர, அதுபோன்ற உத்தரவை தேர்தல் ஆணையர்கள்தான் பிறப்பிக்க முடியும். தேர்தல் ஆணைய செயலர் பிறப்பிக்க முடியாது. மேலும், அங்கீகாரத்தை மட்டுமே ஆணையம் ரத்து செய்ய முடியும். பதிவை நீக்க முடியாது என்பதால் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டனர்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், ‘‘தேர்தல் ஆணைய விதிகளின்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட கட்சிகளை பதிவில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, விசாரணையை மார்ச் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.