சென்னை: தேர்தல் தொடர்பான பதிவுகளை ஏஐ-யில் உருவாக்கினால், அதை அந்த பதிவில் குறிப்பிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி பதிவிட்ட 11 ஆயிரம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000, தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு இணங்க, அனைத்து பங்குதாரர்களும் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை பொறுப்பான மற்றும் நெறிமுறை சார்ந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தவறான அல்லது சட்டவிரோதமான ஏஐ-மூலம் உருவாக்கப்பட்ட, திருத்தப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து சமூக ஊடக தளங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட 3 மணி நேரத்துக்குள் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரப் பிரதிநிதிகள், பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்படும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது ஏஐ மூலம் மாற்றப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும், வெளிப்படைத்தன்மை.
வாக்காளர் நம்பிக்கையை பேணுவதற்காக ‘ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது’, ‘டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது’, ‘செயற்கை உள்ளடக்கம்’ என தெளிவாக அடையாளப்படுத்துவதையும், அதை உருவாக்கிய அமைப்பின் விவரத்தையும் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், நடத்தை விதிகளை மீறும் வகையிலான பதிவுகள், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கக்கூடிய அல்லது சீர்குலைக்கும் திறன் கொண்ட சமூக ஊடகப் பதிவுகள், வாக்குப்பதிவு செயல்முறைக்கோ. தேர்தல் இயந்திரங்களுக்கோ எதிராக பரப்பப்படும் தவறான தகவல்கள் போன்ற சமூக ஊடக உள்ளடக்கங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட மாநிலத் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2026 மார்ச் 15-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுபோன்ற 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பதிவுகள், இணைய முகவரிகள் கண்டறியப்பட்டு, உள்ளடக்கங்களை நீக்கியதுடன், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மார்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை, சிவிஜில் செயலியைப் பயன்படுத்தி 3,23,099 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3,10,393 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.