அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்னோடு நடை பந்தயத்துக்கு வரத் தயாரா? என்று அமைச்சர் துரைமுருகன் கலகலப்பாக கேள்வி எழுப்பினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார். சட்டப்பேரவை தேர்தலில் அவர் 13-வது முறையாக போட்டியிடும் அவர், காட்பாடி தொகுதியில் 11-வது முறையாக நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நான் பெருமைக்காக போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். அவர் பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் பழனிசாமி என்னோடு நடை பந்தயத்துக்கு வரத் தயாரா? வரச் சொல்லுங்கள் பார்ப்போம்’’ என்று சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டுச் சென்றார்.