ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து

 
தமிழகம்

மயிலாடுதுறை எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை கைவிடுக: ஐஜேகே

மு.வேல்சங்கர்

சென்னை: கடல் வளத்தையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மயிலாடுதுறை எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிழக்கே வங்கக் கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவிலான பி ஒய்-3 எண்ணெய் வயலில் மேலும் 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக்‌ஷன் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் அனுமதிக்கான நடைமுறையைத் தொடங்கியிருப்பது கவலை அளிக்கிறது.

எண்ணெய் - எரிவாயு கிணறுகளுக்கான துளையிடும் பணிகள், கழிவுகள் மற்றும் ஆய்வுச் செயல்பாடுகள் கடல் சூழலுக்கும் மீன்வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை சுற்றுச்சூழல் அமைப்புகளும், மீனவர் தரப்பினரும் முன்வைத்துள்ளனர். மயிலாடுதுறை கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக 5 கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள உரிமத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்று கிணறுகள் அமைத்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் மற்றும் அதிர்வுச் சோதனைகளால் மீன்வளம் அழியும். 2050-க்குள் கடலோரப் பகுதிகள் பெருமளவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என செய்திகள் வருவது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, சுற்றுச்சூழலையும், மீன்வளத்தையும் பாதிக்கும் இத்திட்டத்துக்கு வழங்கிய உரிமத்தை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT