தமிழகம்

“ஸ்டாலின் தமிழ் பெயரா என கேட்க துணிச்சல் உண்டா?” - திருமாவுக்கு தினகரன் கேள்வி

செய்திப்பிரிவு

“ஸ்டாலின் தமிழ்ப் பெயரா எனக் கேட்கும் தைரியமும், துணிச்சலும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இருக்கிறதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ், தமிழ் கலாசாரம் அழிய வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாசாரத் தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த அவரது அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.

          

ராஜராஜன் தமிழ்ப் பெயரா... ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவனுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயரா என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுக-வையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை திருமாவளவன் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT