மாணிக்கம் தாகூர் எம்.பி

 
தமிழகம்

”பொறுப்பில்லாமல் பேசி தப்பிக்க நினைக்காதீர்” - ஆதவ் அர்ஜுனா மீது மாணிக்கம் தாகூர் காட்டம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம்’ என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல. அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுகிறோம். ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாக செயல்படுத்துகிறோம்.

          

இந்த அமைப்பின் வரலாறும் மரபும் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் தெளிவாகச் சொல்கிறேன். காங்கிரஸ் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை. நாங்கள் காந்தியின் சிந்தனைகளையும், தமிழ்நாட்டில் காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் உறுதியாக பின்பற்றுகிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிளவை உருவாக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி தினமும் போராடி வருகிறார். அவரது தலைமையிலும், மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலிலும், கட்சி உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறது.

பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பதிலடி உறுதியாகவும் கொடுப்போம். இது சராசரி கட்சி அல்ல. இது கொள்கைக்கான கட்சி, தியாகம் எங்கள் அடையாளம். ஒற்றுமை எங்கள் வலிமை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT