தமிழகம்

வானூர் தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார்?

இரா.தினேஷ்குமார்

உலக மக்களை ஈர்க்கும் ஆரோவில் சர்வதேச நகரம், உலக பிரசித்தி பெற்ற திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளை கொண்டது வானூர் சட்டப்பேரவை தொகுதி. மில்லியன் ஆண்டு கடந்த வரலாற்று சுவடுக்கு உயிர் கொடுக்கும் கல் மரம் நிறைந்த பகுதியாகும்.

வானூர் (தனி) தொகுதியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி, வானூர் ஒன்றியத்தில் உள்ள 65 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. மீனவ கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். செம்மண், மலை, கருப்பு கல் (கருப்பு கிரானைட்) உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டது.

இதனால் குவாரிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதன்மூலம் பெருமுதலாளிகளின் வாழ்வு ஏற்றத்தோடு செல்கிறது. சாமானிய மக்களின் வாழ்வுக்கும் உதவுகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு மிக அருகாமையில் இருப்பதால், அம்மாநில பகுதியின் இடையிடையே வானூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன.

பெரும்பாலான மக்கள் புதுச்சேரி கலாச்சாரம் சார்ந்து வாழ்கின்றனர். அம்மாநிலத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், வானூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கிறது. வன்னியர்கள், பட்டியலின மக்கள் 60 சதவீதம் வாழ்கின்றனர். உடையார், ரெட்டியார், நாயுடு மற்றும் மீனவர் சமுதாயத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட அளவு உள்ளனர்.

சுதந்திர இந்தியாவுக்கு பிறகு 1962 முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இதுவரை 14 முறை வானூர் தொகுதி சந்தித்துள்ளது. 1962, 1967, 1971, 1977, 1980 என தொடர்ந்து 5 தேர்தல்களில் திமுக வாகை சூடியது. 1984-ல் அதிமுக, 1989-ல் திமுக, 1991-ல் அதிமுக, 1996-ல் திமுக என மாறிமாறி வெற்றி பெற்றுள்ளது.

அதன்பிறகு 2001, 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து 5 முறை அதிமுக மகுடம் சூடியிருக்கிறது. திமுக, அதிமுக என தலா 7 முறை வெற்றிக் கனியை சுவைத்துள்ளது. வரலாற்று சுவடுகள் நிறைந்த வானூர் தொகுதியில் இம்முறை திமுக, அதிமுக நேரடியாக மோதுகிறது.

வானூர் தொகுதி மீது விசிகவுக்கு விருப்பம் இருந்தாலும், 2021-ல் அக்கட்சியின் வேட்பாளர் வன்னி அரசுவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. வெளியூர் நபர் என்ற முத்திரையால் விசிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், 2026-ல் திமுக களமிறங்கி இருக்கிறது.

திமுக வேட்பாளர் கவுதம் திராவிடமணி, அதிமுக வேட்பாளர் முருகன் ஆகிய இருவருமே புதுமுகங்கள். விசிக தலைவர் திருமாவளவனின் பிரச்சாரம் திமுக வேட்பாளருக்கு கை கொடுக்கும். மேலும் அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கிறார்.

அதிமுக வேட்பாளர் முருகனுக்கு கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை வாக்குரிமை பெற்றிருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக முருகன் மாற்றப்பட்டார். அவருக்கு மாற்றாக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட ஆனந்தன் வெற்றி பெற்றார்.

இதனால் முருகனின் வெற்றிக்கனி கை நழுவியது. 17 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறார். அதிமுக பொதுச் செயலாளரின் விழுப்புரம் பிரச்சாரத்துக்கு பிறகு கூட்டணி தலைவர்கள் தலையை காட்டாமல் இருந்தாலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்னிலைப்படுத்தி ரத்தத்தின் ரத்தங்களுடன் தனி ஒருவனாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

கால் நூற்றாண்டாக கோலோச்சி வரும் இரட்டை இலையின் வெற்றிக்கனியை தக்க வைக்க போராடுகிறார். அதே நேரத்தில் இரட்டை இலையிடம் இருந்து பறிக்க உதயசூரியனும் முனைப்பு காட்டி வருகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கரிகாலன் போட்டியிடுகிறார். இலவசங்களை தவிர்த்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, தரமான கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும், யாரிடமும் தமிழக மக்களை கையேந்த விடமாட்டேன் என்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கை முழக்கங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஏர் சுமக்கும் உழவர் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுரேஷ் போட்டியிடுகிறார். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம், குடும்பத் தலைவிக்கு ரூ.2,500, பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு பிணையில்லா ரூ.20 லட்சம் கடன் உதவி, ஆண்டுக்கு 6 விலையில்லாகாஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட விஜய்-ன் தேர்தல் அறிக்கையை மேற்கொள்காட்டி விசில் அடித்து பிரச்சாரம் செய்கிறார். இவருக்கும், நாதக கட்சி வேட்பாளருக்கும் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தலைவர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

மக்களின் எதிர்பார்ப்புகள்

வானூர் தொகுதியில் அதிகளவில் கிரானைட் கற்கள் கிடைப்பதால், அவற்றை பாலீஷ் போடும் தொழிற்சாலை மற்றும் கரும்பு சக்கையில் இருந்து காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும். தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அவசியம். நெல் சாகுபடியும் இருப்பதால், போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும்.

கண்டமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் தொடங்க வேண்டும். கண்டமங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தொடங்க வேண்டும். அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ தொடங்கி தொழிற்கல்விக்கு வழிகாண வேண்டும்.

ஐடி பூங்காவில் பல நிறுவனங்களை இடம்பெற செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டும். கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி பகுதியில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு இடத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால், அருகாமையில் உள்ள பகுதியில் மண்ணரிப்பு ஏற்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு நீர் நுழைவதை தடுக்க நீர் மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி, மழை நீரை சேமிக்கும்போது, நிலத்தின் அடியில் உப்பு நீர் நுழைவதை தடுக்கலாம் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏரி, குளங்களில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. காகித அறிக்கையை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர் என விவசாயிகளும், மக்களும் நொந்து கொள்கின்றனர்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் கோட்டக்குப்பத்துக்கு இணையான வளர்ச்சியை தலைமையிடமாக உள்ள வானூருக்கும் கிடைக்க, தமிழக அரசு கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும். வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை, மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் உயர்த்த வேண்டும். மருத்துவர், செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். புதுச்சேரியை ஒட்டி இருப்பதால் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிம்மதியுடன் வாழ சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

குவாரிகள், ரியல் எஸ்டேட் தொழில் செழிப்பாக உள்ளதால் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளன. புதுச்சேரி மற்றும் பிற மாவட்ட ரவுடிகளின் புகலிடமாகவும் இருக்கிறது. முளையிலேயே களையெடுக்க காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்கள் - 1,02,719

  • பெண்கள் - 1,07,089

  • மூன்றாம் பாலினத்தவர் - 16

  • மொத்தம் - 2,09,824

SCROLL FOR NEXT