படம்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

“திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமையை நசுக்க நினைக்கிறது திமுக” - இந்து முன்னணி மாநில தலைவர்

டி.ஜி.ரகுபதி

கோவை: “இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொள்ள, திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை முழுவதுமாக திமுக நசுக்க நினைக்கிறது” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் இன்று (டிச.27) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “திராவிட மாடல் திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி, சிறுபான்மையின மக்களை திருப்திபடுத்துவதற்காக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கிறது. இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு நடத்தி திருப்பரங்குன்றத்தில் ஸ்தல விருட்சமான கல்லத்தி மரத்தில் பிறை கொடியை ஏற்றுகிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவி செய்த திமுக அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டி உயிர் நீத்த பூரணச்சந்திரனின் வீட்டுக்கு கூட ஆறுதல் சொல்ல செல்லவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட அசைவ உணவுகளை கொண்டு சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொள்ள, திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை முழுவதுமாக திமுக நசுக்க நினைக்கிறது.

இந்த நாடு ஜனநாயகத்துக்கு விரோதமாக மாறப்போகிறது எனவும், ஆங்காங்கே கலவரங்கள் வரப்போகின்றன எனவும், நாடு வளர்ச்சி என்பது இல்லாமல் போகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி பேசியுள்ளார். அவர் பேசிய பிறகு, கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் உள்ள சதியை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

இது திட்டமிட்டு பாஜக மீதும் இந்து அமைப்புகள் மீதும் பரப்பப்படும் சதியாகும். இந்த விவகாரம் யாரோ திட்டமிட்டு செய்ததாகும். கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின், இது வகுப்புவாத சக்திகளின் கலவரம் என்கிறார். கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால், அதற்கு முதல்வர் தடை செய்கிறார்.

சுதேசி வணிகத்தை பெருக்கவும், இந்து வியாபாரிகளை ஒருங்கிணைக்கவும் இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக வரும் 4-ம் தேதி ராம் நகரில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தில் மிகப் பெரிய மாநாடு நடத்தப்பட உள்ளது. அதில், ஆயிரக்கணக்கான இந்து வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT