எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: விவசாயிகளுக்காக சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வ சிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.
அப்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், பேரவையில் குரல் கொடுத்ததற்கும் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியதற்காக, தவெக அரசின் காவல்துறை, உதயநிதியைக் கைது செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப் பதைக் கண்டித்து, இந்த கூட்டு இயக்கத்தில் உள்ள 84 விவசாய அமைப்புகளும், பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தங்களுடைய போராட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கு மாறும், சட்டப்பேரவையில் குரல் எழுப்புமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு உதயநிதி, “விவசாயிகளுக்காக சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்” என்று உறுதி அளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.