சென்னை: “ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் ‘தூய சக்தி’ அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?” என தவெகவை திமுக காட்டமாக விமர்சித்துள்ளது.
இது குறித்து திமுக ஐ.டி.விங்க் தனது எக்ஸ் தளத்தில், “அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ‘தூய சக்தி’ போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் ‘போதை சக்தியாக’ மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மவுன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை ‘தமிழ்நாட்டின் மீட்பர்’ என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைதள ‘இன்ஃப்ளூயன்சர்கள்’, இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.