தூத்துக்குடி: தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் ஜாமீன் மனுவை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேபோல், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் மார்க்கண்டேயன் எம்எல்ஏவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபாதேவி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.