கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக இன்று கூடுகிறது மதிமுக பொதுக்குழு. அதேசமயம், தங்களைத் தூற்றிவிட்டு தவெக-வை தூக்கிவைத்துக் கொண்டாடும் விதமாக இன்றைய பொதுக்குழுவில் முடிவெடுக்கப் போகிறது மதிமுக என்பதை ஊகித்துவிட்ட திமுக தலைமை, மதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ‘பொடா தியாகிகள்’ உள்ளிட்டோரையும் நடப்பு நிர்வாகிகள் சிலரையும் நாளை காலையில் அறிவாலயப் பிரவேசத்துக்கு அழைத்திருக்கிறது.
தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வரும் வைகோவும் துரை வைகோவும், திமுக-வுக்கு எதிரான விமர்சனங்களையும் எடுத்து வீசி வருகிறார்கள். இதை வைத்து, அந்தக் கட்சி பயணிக்கப் போகும் திசையைக் கணித்துவிட்ட திமுக-வும் மதிமுக-வையும் வைகோவையும் மானாங்கண்ணியாய் விமர்சித்து வருகிறது.
“ஒட்டுமொத்த கட்சியையும் ஒரு மண்டபத்துக்குள் அடைத்துவிடலாம்” என்று துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா ‘இறங்கி’ அடிக்குமளவுக்கு இருக்கிறது மதிமுக மீதான திமுக-வின் தாக்குதல்கள்.
இந்த நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களான சீர்காழி செந்தில் செல்வனையும், கடையநல்லூர் ராஜேந்திரனையும் ராஜினாமா செய்யவைத்து மீண்டும் அவர்களை தனி சின்னத்தில் போட்டியிட வைக்க மதிமுக தலைமை மெனக்கிட்டு வருகிறது. ஆனால், இவ்விஷயத்தில் எம்எல்ஏ-க்கள் இருவருமே தயங்குவதாகத் தெரிகிறது.
பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்திருக்கும் அதிமுக எம்எல்ஏ-க்களும் இனிமேல் இணையவிருக்கும் சி.விஜயபாஸ்கர் போன்றவர்களும் மீண்டும் போட்டியிட்டால் விசில் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள்.
அவர்களின் வெற்றியானது இலகுவாகக்கூட இருக்கலாம். ஆனால், மதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தால் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டி இருக்கும். அப்படியான சூழலில் மீண்டும் வெற்றிபெறுவது எந்தளவுக்கு சாத்தியம் என்று சொல்வதற்கில்லை. இதையெல்லாம் யோசித்துப் பார்த்தே அவர்கள் தயங்குவதாகத் தெரிகிறது.
இருப்பினும் தலைமையின் கட்டளையை மீறமுடியாத அவர்கள் இருவரும், விஜய் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த நாளில் அவைக்கு வராமல் புறக்கணித்தார்கள். அன்றைய தினம் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இருந்ததால் அவர்கள் இருவரும் சட்டமன்றத்துக்கு வரமுடியவில்லை என்று காரணம் சொன்னார் வைகோ. அதேபோல், நேற்றைய தினமும் மதிமுக உயரிநிலைக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், ராஜேந்திரன் மட்டும் கலந்து கொண்டார். செந்தில் செல்வன் கலந்துகொள்ளவில்லை.
“நான் திமுக-வில் சேர்ந்து திமுக எம்எல்ஏ-வாக இருப்பதால் மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்று அவர் காரணம் சொன்னார். இப்போது இப்படிச் சொல்பவர் முந்தைய கூட்டத்தில் எப்படி கலந்து கொண்டார் என்பதும் விவாதப் பொருளாகிறது. அதேசமயம், ராஜேந்திரன் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதாகச் சொல்கிறது மதிமுக வட்டாரம்.
கூட்டணி விஷயத்தில் மதிமுக கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாக முன்னாள் மற்றும் இந்நாள் மதிமுக நிர்வாகிகளை கட்சியில் சேர்க்க திமுக தலைமை இசைவு கொடுத்திருக்கிறது. மதிமுக-வில் இருந்து மல்லை சத்யா ஒதுக்கப்பட்ட போதே மதிமுக முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் சிலர் திமுக-வில் இணைய விருப்பம் தெரிவித்தார்கள்.
அந்தப் பட்டியலில், வைகோவுடன் ‘பொடா’ சிறைவாசிகளாக இருந்த மதுரை அழகுசுந்தரம், திருப்பத்தூர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரும் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், முன்னாள் விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சந்திரசேகரன், வழக்கறிஞர் வீரபாண்டியன் உள்ளிட்ட 13 முக்கிய தளபதிகள் இருந்தார்கள். ஆனால், இவர்களை கட்சிக்குள் சேர்த்தால் கூட்டணிக்குள் குழப்பம் வரும் என்பதால் அப்போது இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், மதிமுக தற்போது எடுக்கும் அரசியல் நகர்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் வைகோவும் துரை வைகோவும் எடுத்து வைக்கும் விமர்சனங்களை நீர்த்துப் போகச் செய்யவும், தேர்தலுக்கு முன்பு வருவதாகச் சொன்ன முன்னாள் மதிமுக நிர்வாகிகளை இப்போது கட்சியில் இணைத்துக் கொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதன்படி அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட மதிமுக முன்னாள் நிர்வாகிகள் 12 பேர் கொண்ட பட்டியல் திமுக தலைமையிடம் தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களோடு சேர்த்து தற்போது மதிமுக பொறுப்புகளில் இருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களையும் அறிவாலயத்துக்கு அழைத்து வருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் நாளை காலை 11 மணியளவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள்.
இந்த இணைப்புப் பட்டியலில் சீர்காழி எம்எல்ஏ-வான செந்தில் செல்வனின் பெயரும் இருந்தாலும் ஆச்சரியமில்லை என்று சொல்லும் மதிமுக முன்னாள் நிர்வாகிகள், “அதற்கு முன்னோட்டமாக இன்றே அவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி தனது நிலைப்பாட்டை விளக்கக்கூடும். மதிமுக மற்றும் வைகோவுக்கு நெருக்கமானவர்கள் இருக்கும் வட்டாரத்தில் இருப்பதால் கடையநல்லூர் ராஜேந்திரனுக்கு அந்த வளையத்தை விட்டு வருவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கலாம். ஆனால், செந்தில் செல்வனுக்கு அப்படியான சங்கடம் ஏதும் இல்லை” என்றும் சொல்கிறார்கள். இன்றைய மதிமுக பொதுக்குழுவில் திமுக-வுக்கு எதிராக எடுத்துவைக்கப்படும் விமர்சனங்களுக்கு வைகோவுடன் நீண்ட காலம் பயணித்த அந்தக் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை வைத்தே நாளை பதில் கொடுக்கப் போகிறது திமுக.