திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனைச் சரிசெய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
திமுக தனது நிலையில் இருந்து இறங்கி வந்து 29 தொகுதிகள் 2 ராஜ்யசபா சீட்டுகள் கொடுக்க முன்வந்துள்ளது. எனினும், காங்கிரஸ் தலைமை 35 தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக உள்ளதால் கூட்டணி நீடிக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவிடம் 40 இடங்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியதால் கூட்டணிக்குள் சர்ச்சை வெடித்தது. கூடவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரின் கருத்துக்கள் திமுகவினரை கடும் கொதிப்படையச் செய்தன.
இதையடுத்து, ராகுல் காந்தியைச் சந்தித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல் 40 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்ததால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் பின்னரே, விவகாரத்தை சோனியா காந்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
சோனியா தலையிட்ட பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தமிழகம் வந்து முதல்வரைச் சந்தித்தார். அப்போது ஸ்டாலின், “கடந்த தேர்தலைப் போல 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தகட்டமாக நடந்த கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. “மார்ச் 3-ம் தேதிக்குள் முடிவைச் சொல்லுங்கள்” என திமுக தரப்பில் கெடு விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால், கூட்டணிக்குள் மோதல் முற்றத் தொடங்கியது. இந்த இக்கட்டான சூழலில்தான், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ப.சிதம்பரம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகையில், “திமுகவுடனான பேச்சுவார்த்தை முடங்கியதால், நேற்று முன்தினம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் வேணுகோபாலும், கிரிஷ் சோடங்கரும் ஆலோசனை நடத்தினர்.
அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் திமுகவுடன் கூட்டணி வைப்பதே சரி எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை ராகுல் காந்தியிடம் சொன்னபோது, ‘கூடுதல் இடங்கள் இல்லாமல் திமுகவுடன் பயணிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் ‘தவெக’வுடன் (விஜய் கட்சி) காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லப் போகிறது எனத் தகவல் பரவியது. ராகுல் காந்தி ஹைதராபாத் நிகழ்ச்சியில் இருந்த அந்த நேரத்தில், நிலைமை மோசமாவதை உணர்ந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
‘திமுக கூட்டணியில் நீடிப்பதே காங்கிரஸுக்குச் சரியான முடிவு. விஜய்க்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பது இன்னும் நிரூபணமாகவில்லை’ என்று எடுத்துரைத்தவர், ‘நானே நேரில் சென்று முதல்வரைச் சந்தித்துச் சிக்கலைத் தீர்க்கிறேன்’ எனச் சொல்லி சோனியாவின் சம்மதத்தைப் பெற்றுள்ளார்.
இதன்படியே முதல்வரை நேற்று சந்தித்த சிதம்பரம், மிகவும் நிதானமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். “மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழலில் மதச்சார்பற்ற சக்திகள் சிதறுவது எதிரிக்குக் கொடுக்கும் வாய்ப்பாகிவிடும்.
கடந்த காலங்களில் கருணாநிதி அவர்களுடன் இணைந்து நாங்கள் பயணித்த அதே தோழமையைத் தொடர விரும்புகிறோம். சில தொகுதிகளுக்காக இந்தக் கூட்டணி உடைவது தேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூத்த தலைவரே தேடி வந்ததால், இடங்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு அதிகரிக்க முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முன்னேற்றத்தைத் டெல்லிக்குக் கொண்டு சென்றுள்ளார் சிதம்பரம். தற்போதைய நிலவரப்படி, திமுக 29 தொகுதிகளையும், 2 மாநிலங்களவை இடங்களையும் வழங்க முன்வந்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைமை, ‘மாநிலங்களவை சீட் வேண்டாம், 35 தொகுதிகளைத் தாருங்கள்’ எனக் கேட்டுள்ளது. எப்படியும் விரைவில் இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டுவிடும். அது என்ன முடிவு என்பதும் தெரிந்துவிடும்” என்கின்றனர்.
முதல்வரை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது. திமுக எந்தக் கெடுவும் விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது; இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.