மயிலாப்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் த.வேலு. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக த.வேலு எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஏற்கனவே செய்து கொடுத்த மழை நீர்வடிகால்வாய் பணி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு கட்டிக் கொடுத்தது, கோயில்களில் குடமுழுக்கு செய்து கொடுத்தது, ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிக் கொடுத்தது, விளையாட்டு மைதானங்கள் புதுப்பித்துக் கொடுத்தது உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும், மயிலாப்பூர் தொகுதியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்றுவேன். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும். மீனவர்களுக்கு தரமான மீன் அங்காடி அமைத்துக் கொடுப்பேன்.
இடிக்கப்படும் குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கு அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து மயிலாப்பூர் தொகுதியை தமிழகத்தில் நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என உறுதி அளித்து த.வேலு வாக்கு சேகரித்து வருகிறார்.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, உதயசூரியனுக்கு கடந்த முறையை விட இந்த முறை அதிக ஆதரவு உள்ளது. இங்கேயே பிறந்து, வளர்ந்து, பணி செய்து, வெற்றி பெற்று செய்து முடித்த நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்கிறேன். எனவே, இந்த முறையும் நான் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி’ என்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழிசை சவுந்தரராஜன்
இதேபோல், மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மயிலாப்பூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.