பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் இடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ளச் சொல்லி கூட்டணிக் கட்சிகளை திமுக கோரி வருகிறது. தேமுதிகவிடமும் ஒரு தொகுதியை குறைத்துக் கொண்டு 9 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமாறு திமுக கோரியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தொகுதிப் பங்கீடு, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'தேமுதிக, மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 23-ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.