சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களுக்கான நெறிசார் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.
அதில் முக்கியமாக, ‘ஜெனரிக் மருந்துகளை (மூலப்பெயர் கொண்ட மருந்துகள்) மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். இந்த விதியை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆட்சேபம் எழுந்தது. ‘ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வதில் தவறில்லை. ஆனால், அதன் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தரமற்ற மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்தது.
நாடு முழுவதும் உற்பத்தியாகும் அனைத்து மருந்துகளின் தரத்தையும் உறுதிப்படுத்துவதை ஒழுங்குமுறை செய்த பிறகே, இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை ஏற்ற மருத்துவ ஆணையம், அந்த விதிகளை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசின் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் தற்போது அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடந்த 2023 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மத்திய அரசின் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
இதை மருத்துவமனை நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.