உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“நமக்கு கிடைத்த பாதி வெற்றி...” - தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் உதயநிதி பெருமிதம்

கி.பார்த்திபன்

நாமக்கல்: “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது மூலம் நாம் பாதி வெற்றியடைந்துள்ளோம்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவை நாமக்கல்லில் தலைவர் ஸ்டாலின் தீயிட்டு எரித்தார். அந்த தீ நாடு முழுவதும் பரவியது.

நாடாளுமன்றத்திலும் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது. இது நமக்கு கிடைத்த பாதி வெற்றி தான். மீதி வெற்றி ஏப்.23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின் தலைவர் ஸ்டாலின் முதலில் கட்டணமில்லா பயணத்திட்டத்துக்கு கையெழுத்திட்டார்.

அதுபோல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவ, மாணவியர் 10 லட்சம் பேருக்கு ஒரே சமயத்தில் லேப்டாப் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தேர்தலை காரணம் காட்டி அதிமுகவும், பாஜகவும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த பார்த்தனர். ஆனால், கோடை சிறப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் உரிமைத் தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை. ஏன் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. எனவே இந்த தேர்தலில் பாஜக கூட்டணியை வீழத்த வேண்டும். தொகுதி மறுவரையறை எதிர்த்த முதல் மாநிலம் தமிழகம் தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை ஆதரித்தார்.

முரட்டு பக்தர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், முரட்டு அடிமை பார்திருக்கமாட்டீர்கள். பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி.

மோடி மீது கோபத்தை காட்டினால் வச்சு செய்துவிடுவார். அதனால் என் மீது எடப்பாடி பழனிசாமி கோபத்தை காட்டுகிறார். சங்கிக் கூட்டத்தை தமிழகத்துக்குள் நுழைவிடக் கூடாது. ஜெயிக்க போவது தமிழக அணி தான் என்பதை நிரூப்பித்துக் காட்ட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT