சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால், நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்தது. தொடர்ந்து சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் வடதமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறையக் கூடும். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்-தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வந்தது. இது, புதுச்சேரிக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 80 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் வடதமிழகம்-புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. அடுத்த 12 மணி நேத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுவிழக்கவுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, எண்ணூரில் 26 செ.மீ. பதிவாகியுள்ளது.
வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.