மாதிரி படம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடாக 211 துணை ராணுவப்படையினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் தங்குவதற்காக சென்னை மாநகராட்சி திருமண மண்டப முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கடந்த பிப்.26-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகத்துக்கு நேரில் வந்து, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், ஐஜிக்கள், தலைமைச் செயலர், டிஜிபி, ஐடி, ஈடி அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப உதவிப் பணியாளர் களுக்கும், தேர்தல் ஆணைய செயலிகளான இசிஐ நெட் (ECINET), இடிப்பிபிஎம்எஸ் (ETPBMS) பயன்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு, கட்டணச் செய்தி கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
ஏற்கெனவே, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக துணை ராணுவப் படையின் 50 கம்பெனிகள் தமிழகத்துக்கு அனுப்பப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில், நேற்று 211 துணை ராணுவப் படையினர் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து துணை ராணுவப்படையின் 50 கம்பெனிகளும் வரவுள்ளன. அப்படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி வசம் 55 திருமண மண்டபங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவப் படையினர் தங்குவதற்காக இந்த மண்டலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதனால் இந்த 55 திருமண மண்டபங்களின் முன்பதிவு, கடந்த பிப்.26 முதல் ஜூன் 15-ம் தேதி வரை முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, மீண்டும் முன்பதிவு தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று தமிழகத்தின் பிற மாநகராட்சிகளின் பராமரிப்பில் உள்ள திருமண மண்டபங்களிலும் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.