மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

 
தமிழகம்

“கருணாநிதி குறித்து பழனிசாமி பேசியது தேர்தல் ஜனநாயகத்துக்கு இழுக்கு” - பெ.சண்முகம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை பொருத்தமற்ற வகையிலும், கண்ணியக்குறைவாகவும் உள்ளது தேர்தல் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்படுத்துகிறது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அரசியல் நாகரீகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அண்மையில் தனது தேர்தல் பிரச்சார உரையில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மற்றவர்களால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார், அவர் தலைவராக இருந்தபோதே மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அவதூறு செய்திருக்கிறார்.

          

கருத்துகளும், கொள்கைகளும் மோத வேண்டிய களத்தில், தமிழக முதல்வர் குறித்து உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்யும் நிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் வந்தது ஏன்?

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களையும், இந்திய மக்களையும் வஞ்சிக்கும் கூட்டணி கட்சியான பாஜகவைப் புகழ்ந்து பேச எதுவும் இல்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து சொல்வதற்கும் எதுவும் இல்லை. எனவே தான் தரம் தாழ்ந்து அவதூறு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். கட்சி அடையாளங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் எல்லை தாண்டப்பட்டதாகவே இந்த உரையைக் கருத வேண்டி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை பொருத்தமற்ற வகையிலும், கண்ணியக்குறைவாகவும் தொடர்ச்சியாக அமைந்து வருவது தேர்தல் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது என்ற முறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT