மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பெ.சண்முகம், இந்தத் தேர்தலில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்வேளூர் (தனி) தொகுதியானது திமுக, அதிமுக என எந்தக் கூட்டணியாக இருந்தாலும் பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே ஒதுக்கப்படுகிறது. 2011-ல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட நாகை மாலி வெற்றி பெற்றார். அடுத்து 2016-ல் இதே தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட மாலி, திமுக வேட்பாளரான உ.மதிவாணனிடம் தோற்றுப் போனார். 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிட்ட நாகை மாலி வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக உள்ளார்.
இந்த முறையும் இந்த தொகுதியை தங்களுக்கு திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக 3 முறை தான் வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் சிட்டிங் எம்எல்ஏ-வான நாகை மாலிக்கு 3 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் நாகை மாலி மீண்டும் போட்டியிடுவது சந்தேகமே. சிறப்பு விதிவிலக்களித்தால் மட்டுமே மீண்டும் அவர் போட்டியிடுவார், இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட்கள் மாற்று வேட்பாளரைத் தேட வேண்டி இருக்கும்.
இந்தநிலையில், இந்தத் தொகுதியில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் களம் இறங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஒருவேளை அவர் போட்டியிடாவிட்டால் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
மீண்டும் திமுக-வே போட்டியிட்டால் முன்னாள் அமைச்சர் மதிவாணன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனியப்பன், ‘தாட்கோ’ தலைவர் இளையராஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.