சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்ட 280 பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) மாநில செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 1998 முதல் எல்கார்ட் மூலம் பணியாளர்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் பணியில் சுமார் 280 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.
2019 முதல் பாண்டன் நிறுவனம் மூலம் தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் பணி மற்றும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச்சான்று, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் எடுக்கும் பணி போன்றவற்றில் குறைவான ஊதியத்தில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், 15.09.2026 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று இணையதளம் மற்றும் எண்ம முறையில் பதிவிறக்கம் செய்யும் முறை கொண்டுவரப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 12.09.2026 அன்று இந்த 280 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வருடங்கள் முதல் இருபத்தெட்டு வருடங்கள் வரை போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வந்த இப்பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவோம் என கடந்த ஆட்சியில் உறுதி வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென நீதிமன்றமும் பரிந்துரை செய்தது. ஆனாலும், பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.
தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.
பணி நீக்கம் செய்யப்பட்ட இப்பணியாளர்களுக்கு, போக்குவரத்துத் துறையில் பொருத்தமான வேறு பணியை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் பணியை முடித்தவர்களுக்கு, தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசை வழியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.