தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலர், ஏடிஜிபி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17-ம் தேதி காணொலி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற சிஐஎஸ்எப் கமாண்டர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மனுதாரருடன் சென்ற தங்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் 200 போலீஸார் தடுத்து நிறுத்தியதாகவும், நீதிமன்ற உத்தரவில் நீதிபதியின் கையொப்பம் இல்லை, மாவட்ட ஆட்சியர் 144 தடையாணை பிறப்பித்திருப்பதால் மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என கூறி தடுத்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.3-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறியதை ஏற்கலாம். மறுநாள் அந்த 144 தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிவிட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுப்பதற்கு போலீஸாருக்கு எந்த காரணமும் இல்லை. மேலும் 144 தடையை நீக்கி மாநகர் காவல் ஆணையர் முன்னிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மறுநாள் காவல் ஆணையர் லோகநாதன் அங்கு இல்லாமல் பொறுப்பை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யனிடம் வழங்கியுள்ளார். அவரும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இதுவரை தலையிடவில்லை. உயர் நீதிமன்ற அமர்விலும் மேல்முறையீட்டு மனு மீது எந்த இடைக்காலத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். ரிட் மனு மீது பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் டிச.3-ம் தேதி அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவு டிச.4-ம் தேதி உயர் நீதிமன்ற அமர்வால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிச.3-ம் தேதி பிறப்பித்த உத்தரவு டிச.4-ம் தேதி மீண்டும் வலியுறுத்தப்பட்டது. தனி நீதிபதி உத்தரவின் மேல் எந்த இடைக்காலத் தடையும் இல்லாத நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பது அவமதிப்பு வழக்கின் விசாரணைக்குத் தடையாக இருக்காது.

இந்த அவமதிப்பு வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை 2 முறை அமல்படுத்தாதது தொடர்பானது. நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை, சட்டத்தை அமல்படுத்துவதும், பெரும்பாலும் வாய்மொழியாகப் பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததும்தான். உயர் அதிகாரியின் உத்தரவு பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், சட்டவிரோத உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியதில்லை.

இந்த அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே மீறும் போது அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியது வரும்.

நீதிமன்ற உத்தரவை மீறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். இதுபோன்று கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடும்பாறை முருகன் சிலை வழக்கிலும், திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் மண்டு கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன.

நான் இங்கு கைகளை விரித்து, "ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது" என்று கூச்சலிட வரவில்லை. இதனால் தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் டிச.17-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

மனுதாரர்கள் மத்திய உள்துறைச் செயலரை வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க கோரியுள்ளனர். அதன்படி மத்திய உள்துறைச் செயலர் 4-வது எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார். அவர் பதிலளிக்க வேண்டும். விசாரணை டிச.17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT