நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்
புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், இண்டியா கூட்டணியை சேர்ந்த 120 எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
தமிழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத் தினத்தில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், மலையில் வழக்கம் போல் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகமும், போலீஸாரும் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, இந்து அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன், மனுதாரரை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவித்த போலீஸார், தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க முடியாது என்று மீண்டும் தடுத்தனர். மேலும், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் தொடங்குவதற்கு முன்னதாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சந்தித்தனர். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மான நோட்டீஸை அவரிடம் எம்.பி.க்கள் வழங்கினர்.
அப்போது திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த பதவி நீக்க தீர்மானத்தில் மொத்தம் 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முடிவெடுப்பார்.
விதிகள் தெரிவிப்பது என்ன? - நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு தீர்மானம் தர வேண்டும்.
பின்னர் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால் 3 நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் என 3 பேர் இருப்பார்கள். இந்தக் குழு, ஆதாரங்களை ஆராய்ந்து விசாரிக்கும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் விசாரணைக் குழு கேட்கும்.
இதன்பின்னர் விரிவான அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் விசாரணை குழு சமர்ப்பிக்கும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமும் அதன் பின்னர் வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
பதவிநீக்கம் செய்ய அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இல்லாவிட்டால் தீர்மானம் நிராகரிக்கப்படும். ஒருவேளை ஆதரவு கிடைத்துவிட்டால், அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியை, பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு போதுமான எம்.பி.க்கள் இல்லை. எனவே, இந்தத் தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
