திருச்சி: உயர்கல்வி துறையின்கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி ஆணையரான இ.சுந்தரவல்லி ஐஏஎஸ், பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், துணைவேந்தர் வழிகாட்டும் குழு உறுப்பினராகவும் இவர் உள்ளார். இந்நிலையில், ஜன.10-ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி- யோகா பிரிவில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பித்துள்ளார். நுழைவுத்தேர்வு எழுதி தேர்வாகாததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்தது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, “சுந்தரவல்லி ஏற்கெனவே உயர்கல்வித் துறையில் உயரதிகாரியாக உள்ளார். கவுரவ முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழத்தை நிர்வாகம் செய்யக்கூடிய இணை இயக்குநர், அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பித்தது எப்படி, இதற்கு உயர்கல்வித் துறை செயலரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லியிடம் கேட்டபோது, “பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழிகாட்டும் குழுவில் இருப்பதால் என்னைப்பற்றி பல்வேறு சர்ச்சைகளை கிளப்புவதை சிலர் வழக்கமாகவைத்துள்ளனர். நான் முறைப்படி உயரதிகாரிகளிடம் அனுமதிபெற்றுதான் முனைவர் பட்டம்பெற விண்ணப்பித்தேன். 3 பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பதால் நுழைவுத் தேர்வில் என்னால் தேர்ச்சியடைய முடியவில்லை. ஆனால், மீண்டும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பிப்பேன்’’ என்றார்.