சென்னை: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அவர் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த மே 7-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த காலி இடத்துக்கு ஜூன் 18-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி நிறைவடைந்தது. தவெக ஆதரவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கர வர்த்தி மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மனுக்கள் பரிசீலனை 9-ம் தேதி நடைபெற்றது. மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 10 எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதம் இருக்க வேண்டும்.
அந்த வகையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி தவிர மற்ற யாருக்கும் எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதம் இல்லாததால், 12 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது.
இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி அறிவித்தார்.
தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தியிடம் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் என மாநில உரிமைக்கு எதிராக சில மசோதாக்களை கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிராகவும், தமிழக நலன்கள், பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காகவும் மாநிலங்களவையில் எனது குரல் கட்டாயம் ஒலிக்கும்.
முதல்வரின் பெருந்தன்மை
கூட்டணிக்கு மதிப்பளித்து இந்த இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுத்தது முதல்வர் விஜய்யின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
தவெகவின் முதல் எம்.பி.யாக அக்கட்சியைச் சேர்ந்தவரே சென்றிருக்கலாம் என்ற எண்ணம் அதன் தொண்டர்களிடம் இருப்பது இயல்பானது. ஆனால், தேசிய அரசியலில் எனக்கு நீண்டகால அனுபவம் இருப்பதால், தமிழகத்தின் குரலை அங்கு வலுவாகப் பதிவுசெய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதை முழுமையாக நிறைவேற்றுவேன். தமிழகத்தில் புதிய அரசு அமைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றன.
ஆனால், முதல்வர் தனது பிரச்சாரத்திலும், பதவியேற்பு விழாவிலும் கூறியதுபோல, ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி வழங்குவதுதான் இந்த அரசின் முதல் நோக்கம். அதை நோக்கியே அமைச்சரவையும் செயல்பட்டு வருகிறது.
ஒரு மாதத்தில் அரசியலிலும், நிர்வாகத்திலும் இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டிருப்பது பாராட்டத்தக்க விஷயமாகும். இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை எம்.பி.யாக இவர் 2028 ஜூன் 29-ம் தேதி வரை சுமார் 2 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.