சென்னை: வீடு மின் நுகர்வோர்களுக்கு அதிகப்படியான கட்டணம் வந்த நிலையில் 3.7 லட்சம் மின் இணைப்பில் இரண்டாயிரம் இணைப்பில் மட்டுமே குளறுபடி நடந்துள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூன் மற்றும் ஜூலைமாத இருமாதக் கணக்கீட்டுச் சுழற்சியில், மென்பொருள் மூலமாக 3.7 லட்சம் மின் இணைப்புகளில் கட்டணம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மின்வாரியம் தரப்பில் ஆக.1-ம் தேதி முதல் சிறப்பு மறுஆய்வு செய்யப்பட்டது. மனித தவறுகள் இந்த ஆய்வில் 2 ஆயிரம் இணைப்புகளில் மட்டுமே மனித தவறுகளால் கட்டணம் தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளோம். பெரிய நுகர்வோர் தளத்தில் இந்த அளவிலான மனித தவறுகள் தவிர்க்க முடியாதவையாகும்.
இந்த கட்டண குளறுபடிகளுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக மக்கள் உண்மையாகவே அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது ஒரு காரணமாகும்.
இதுமட்டுமின்றி, ஜூலை மாதமத்தியில் மின்வாரியப் பணியாளர்கள் சிலர் நேரில் சென்றுரீடிங் எடுக்காமல்தோராயமாகக் கணக்கிட்டதும், சில பழுதான மீட்டர்களும் இந்தப் புகார்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
கூடுதல் கட்டணம் சரிசெய்யப்படும் தற்போது இந்த ஆய்வின் முடிவில் தவறான கணக்கீட்டால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் நுகர்வோர்களிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் கட்டணம், அவர்களின் அடுத்த மாத மின் நுகர்வுப் பட்டியலில் கழித்துக் கொள்ளப்படும்.
அதேபோல், பில் அதிகமாக வந்துள்ளதாகக் கூறும் மற்ற நுகர்வோருக்கு, அவர்களின் மின் பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என மின்வாரியம் தரப்பில் எங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.