சென்னை: மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.18,073 ஆகவும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ.16,073 ஆகவும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களான எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரையும், பிடிஎஸ் படிப்புக்கு ரூ.2.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரையும், வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கு ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்புக்கு ரூ.6 லட்சமும், வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கு ரூ.9 லட்சமும் கட்டணம் ஆகும்.
இதைத்தவிர, கூடுதலாக வசூலிக்கப்படும் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது விதி.
இதற்கிடையே, அனைத்து மருத்துவ கல்லூரிகளும் எம்பிபிஎஸ் கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும், பயிற்சிக் காலத்துக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.
ஆனால், விதியை மீறி 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக முதல்வர் தனிப்பிரிவுக்கும், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கும் புகார்கள் வந்தன.
அதுகுறித்து ஆய்வு செய்ய அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒரு வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.