மு.வீரபாண்டியன்
சென்னை: பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு, சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த பெரியார், அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.
பெரியார், அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை, வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து போராடியவர்கள். அப்படிப்பட்ட தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டதை தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது.
அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இத்தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கும், மத அடிப்படை வாதிகளுக்கும், பிற்போக்குச் சக்திகளுக்கும் எப்போதுமே எட்டிக்காய் போன்று கசக்கும்.
எனவே, இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை? என்பது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும். பெயர் நீக்கத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.