திமுக கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்பமனு விநியோகம் என தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கிவிட்டுள்ளது.
மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி திமுக நடத்தி வருகிறது. இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளின் குழுக்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது,கம்யூனிஸ்ட்களுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. அதற்கு கடந்த தேர்தலை போல் 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தினர்.
சென்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.