பெ.சண்முகம் | கோப்புப் படம்
சென்னை: திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என, சென்னையில் வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வியாசர்பாடி மூர்த்தி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியிலும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவடி மாநகராட்சியில் உள்ள கோயில்பதாகை தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
டி.ராஜா: நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்கு செலுத்துவது என்பது ஒரு முக்கியமான உரிமையாகும். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதேபோல், மேற்கு வங்கத்திலும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகம் பாஜகவின் பேரழிவு தரும் சித்தாந்தத்துக்கு எதிராக போராடுவதைப் போலவே, வங்காள மக்களும் பாஜகவை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க வேண்டும்.
பெ.சண்முகம்: மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். நம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியது இந்த தேர்தல். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். இதற்கான அறிகுறிகள் தமிழகம் முழுவதும் தென்படுகிறது என்று தெரிவித்தார்.