சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில், 5 பேர் கொண்ட சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு வருவதாக வீட்டுவசதித் துறை செயலர் கிர்லோஷ் குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மூலம், சென்னையில் வீடுகள் இல்லாமல் தெருவோரங்களில் வசித்தவர்கள், கூவம் ஆற்று ஓரங்களில் வீடு கட்டி தங்கியிருந்தவர்கள், ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு கட்டியிருந்தவர்கள் என பலருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, எண்ணூர், வியாசர்பாடி, பட்டினப்பாக்கம், சேத்துப்பட்டு, கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி, கொட்டிவாக்கம், அயப்பாக்கம் உள்ளிட்ட 207 திட்டப் பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
இக்குடியிருப்புகளில், லட்சக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், இங்கு குடிநீர் வாரியத்தால் வழங்கப்படும் நீர் போதுமான அளவுக்கு இல்லை என அவ்வபோது பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அண்மையில் கூட கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் இந்த பிரச்சினைகள் பெருமளவில் எழுந்தன.
குறிப்பாக, குடிநீர் வாரியத்தால் தண்ணீர் தொட்டிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் நிரப்பப்படுவதால் குடிக்க மற்றும் குளிக்க உள்ளிட்டவற்றுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜ்குமார் உத்தரவின்படி, அதிகப்படியான கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளுக்கு தனித்தனியாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் கிர்லோஷ் குமார் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நேரடியாக கள ஆய்வு நடத்தி வருகிறோம்.
குறிப்பாக, அங்கு வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி மண்டல அலுவலர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வுகளை செய்து வருகின்றது.
தற்போது வரை ஒக்கியம் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அனைத்து இடங்களிலும் இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதன் மூலம், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் கண்ணகி நகர், எழில் நகரில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ஆனந்த் கூறியதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் எழில் நகர் குடியிருப்பு பகுதியில் 10 லட்சம் லிட்டர் கீழ்நிலை குடிநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
மேலும்,பம்பு செட்டுகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்ணகி நகரை பொறுத்தவரை 38 லட்சம் லிட்டர் மேல்நிலை குடி நீர் சேகரிப்பு தொட்டியும், 24 லட்சம் லிட்டர் கீழ்நிலை குடிநீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் செப்டம்பரில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டிகள் கொண்டு வரப்படும். இதனால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பத்தினர் குடிநீர் பற்றாக்குறையின்றி பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டன் ஆறுமுகம்