சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ராம்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரே அமைவிடத்தில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எளிதாக வாக்குச்சாவடியை அறிந்து செல்ல இளஞ்சிவப்பு, நீளம், வெள்ளை நிற பட்டிகளில் வாக்குச்சாவடி எண்களை குறிப்பிட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தரையில் அதே நிறம் பூசி வைக்கப்பட்டுள்ளன. | படம்: ச.கார்த்திகேயன் |
சென்னை: தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் 975 அமைவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும், 16 தொகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க பல வண்ணங்களில் குறியீடுகள் (கலர் கோடு) மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வண்ணமிடப்பட்ட பாதைகளின் வழியே வாக்காளர்கள் செல்ல உரிய வண்ணம் கொண்ட வழிகாட்டிப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க, மிகவும் உதவிகரமாக அமைந்திடும் என மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, ராம்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒரே அமைவிடத்தில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எளிதாக வாக்குச்சாவடியை அறிந்து செல்ல ஏதுவாக இளஞ்சிவப்பு, நீளம், வெள்ளை நிற பட்டிகளில் வாக்குச்சாவடி எண்களை குறிப்பிட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தரையில் அதே நிறம் பூசி, அப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தும் வழிகாட்டு பலகைகளும் அதே வண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வசதிகள் 73 அமைவிடங்களில் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 தொகுதிகளில் தலா ஒரு அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகளும், மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.