தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 23 நீதிபதி பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்தாண்டு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, சி.திருமகள் சந்திரசேகர், டி.லிங்கேஸ்வரன், கே.பாலதண்டாயுதம், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர்களாக பணியாற்றிய என்.ரமேஷ், ரஜினிஷ் பதியில், வழக்கறிஞர் ஜி.கே.முத்துக்குமார், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கே.கோவிந்தராஜன், புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக பதவி வகித்த எஸ்.ரவிக்குமார், ஏற்கெனவே சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்த ஆர்.அனிதா மற்றும் வழக்கறிஞர்கள் இ.மனோகரன், என்.திலீப்குமார், கே.அப்பாதுரை ஆகிய 10 பேரின் பெயர்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக, சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 19 பேருக்கும் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அடுத்தக் கட்டமாக, இவர்களின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், குடியரசுத் தலைவர் இவர்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பிப்பார்.

SCROLL FOR NEXT