சென்னை: தமிழகத்தில் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்று வதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொழிற்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தபின் முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி செப்.10 முதல் 16-ம் தேதி வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அங்குள்ள தொழில் நிறுவனங்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாகவே, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா செப். 4-ம் தேதி தைவான் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, சிப் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு தைவான் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.