சென்னை: “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்தது அப்போதைய திமுக அரசு. அது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் கோடை கால சிறப்புத் தொகை என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
அதேபோல், அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் தற்போது மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர தொகை, ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
அந்தவரிசையில் தவெக தனது தேர்தல் அறிக்கையில் 65 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2500 வரவு வைக்கப்படும் என்றது. இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கைவிரித்துள்ளது.