தமிழகம்

அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) சனிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது. திரையுலகினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்குமாரின் தாயார் மறைந்த செய்தியை அறிந்ததும், தமிழக முதல்வர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த மோகினி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். 

முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த அஜித் துபாயிலிருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தார். நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT