சென்னை: அறநிலையத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 பேருக்கு முதல்வர் விஜய் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட முடிகாணிக்கை மண்டபம், 125 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்களை முதல்வர் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 பேருக்கு முதல்வர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அறநிலையத் துறைக்கு முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் உதவிப் பொறியாளர், உதவி ஸ்தபதி பணியிடங் களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ரமேஷ், தலைமைச்செயலர் மு.சாய்குமார், துறை செயலர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையர்கள் துரை ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.