தமிழகம்

CWG 2026: பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

முதல்வர் விஜய் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய். அத்துடன், அவர்களுக்கு ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

ஒரே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இரு வீரர்களும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழக விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், பிரவீன் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்தப் போட்டியில் 16.72 மீட்டர் தூரம் தாண்டிய ஜமைக்காவின் ஜோர்டான் ஸ்காட் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

SCROLL FOR NEXT