சென்னை: “தவறுகளை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் விஜய் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதுவே ஒரு நல்ல அறிகுறி. இந்த பகிரங்க அறிவிப்பு மக்களிடத்திலே பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது” என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், “ தவறுகளை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் விஜய் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதுவே ஒரு நல்ல அறிகுறி. இந்த பகிரங்க அறிவிப்பு மக்களிடத்திலே பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.
நான் மிகச்சிறியவன். என் 30 ஆண்டு காலத்தில் ஒரு உறுதியான, நேர்மையான போராட்டத்தை நடத்தியுள்ளேன். நான் தொடர்ந்து இந்த தமிழ் சமூகத்துக்காக என் பங்களிப்பை செய்வேன். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது உங்களைப் போன்ற ஊடகத்தினரின் கற்பனை. நான் சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவன், அதில் ஈடுபடுவேன்.
2010க்கு முன்பாக இந்தியாவின், ஆசியாவின் மிகப்பெரிய கிரானைட் கனிமவள ஊழலை வெளிக்கொண்டு வந்தேன். ஆனால், நமது எவ்வளவு மோசமான ஊழல் மிகுந்த அமைப்பாக இருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கு வரைக்கும் அந்த விவகாரத்தில் சிறு துளி கூட நகரவில்லை.
தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதற்காக ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் அதற்காக கணிசமான தொகை வட்டியாக கட்டப்படுகிறது. எனவே இது சவாலான பணி. இதனால் செலவீனங்களை குறைத்து, ஊழல்களை அகற்றி நிச்சயமாக லட்சியத்தோடு பயணித்தால் ஒரு காலகட்டத்தில் கடனை குறைக்க முடியும். அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக சொன்னதை வரவேற்கிறேன்” என்றார்.