பாமக தலைவர் அன்புமணி

 
தமிழகம்

“முதல்வர் விஜய்யின் கொள்கைகளும், பாமக கொள்கைகளும் 90% ஒன்றே” - அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: “முதல்வர் விஜய்யின் கொள்கைகளும், பாமக கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளன” என்று பாமக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பாமகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “கடந்த ஓராண்டில் பாமகவில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். களையை தூக்கி எறிந்துவிட்டோம். பயிர் நன்றாக இருக்கிறது. அடுத்து நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றிகளை பெறுவோம். திமுகவை அகற்ற வேண்டும் என்பது பாமகவின் நோக்கமாக இருந்தது. அது நடந்துவிட்டது.

அரசியலை இளைஞர்கள் தெரிந்து கொண்டார்கள். அரசியல் மீது அவர்களுக்கு ஆர்வம் வந்துள்ளது. அதை மதிக்க வேண்டும். அவர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்.

முதல்வர் விஜய் என்னை சந்தித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு புள்ளி விவரங்கள் தெரியவரும். அதன் அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தலாம் என்று தெரிவித்தேன். தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். உறுதியாக நாங்கள் செய்வோம் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். முதல்வர் விஜய்யின் கொள்கைகளும், பாமக கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளன.

சில மாவட்டச் செயலாளர்கள் எதற்கு அந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை அவர்களே உணரவில்லை .எனவே கட்சியில் மறு சீரமைப்பு விரைவில் நடைபெறும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொறுப்புகளுக்கு வர வேண்டாம்” என்று அன்புமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT