சென்னை: ‘தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் இருக்க வேண்டும். அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் எதிர்காலத்துக்கான முதலீடு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசின் மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2026’ தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக இந்தியாவில் முதல்முறையாக டீப்-டெக் தொழில்நுட்பத்துக்காக மாநில அளவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கை 2025-26’-ஐ முதல்வர் வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பெட்டர் கம்ப்யூட் வொர்க்ஸ், ஈராஸ் ஜென் ஏஐ, பேன்டம் டிஜிட்டல் எஃபெக்ட்ஸ், ரீவைன் ஹெல்த்கேர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் 4,250 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில்நுட்பம் பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக இன்றைக்கு மாறியிருக்கிறது. நாம் பாரம்பரியமாக வலுவாக இருக்கும் சர்வீஸ் செக்டாரிலிருந்து, உயர் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புதுமை மையமான பொருளாதாரத்துக்கு தமிழகம் நகர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கான உலகளாவிய திறன் மையங்களின் (ஜிசிசி) மையமாக சென்னை நகரம் உருவெடுத்து வருகிறது. தொழில்நுட்பத்தை வெறும் பொருளாதார வளர்ச்சி கருவியாகப் பார்க்காமல், சமூக முன்னேற்றத்துக்கான சாதனமாக பார்ப்பதுதான் திமுக.
தொழில்நுட்பத்துக்கு அடித்தளம்: தொழில்நுட்பத் துறையில் இந்த அளவுக்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. கொள்கையில் தொடங்கி,கல்வி நிறுவன செயல்பாடுகள்,நான் முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பன்னாட்டு முகமைகள் வரை எல்லாம் ஒரே பாதையில், ஒரே இலக்குடன் சேர்ந்து செயல்படுவதே நம் வளர்ச்சிக்கான காரணம். இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் சமமாகப் பரவியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி இரண்டாம் மற்றும்மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும், தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது. இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான், ஏஐ தொழில்நுட்பத்துக்கான சந்தாவுடன் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியிருக்கிறோம்.
இதை இலவசம் என்று நாங்கள் கருதவில்லை. தொழில்நுட்பம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதற்கு எதிர்காலத்தை நோக்கிய முதலீடாக பார்க்கி றோம். தமிழகத்தின் இலக்குகள் தெளிவானது. புது யுகத்தின் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பிரஜேந்திர நவ்னீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.பி.கார்த்திகேயன், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமை நிர்வாக அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநர் சோமகன், கவிஞர் மதன்கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.