சென்னை: சட்டப்பேரவையின் நிறைவு நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். தமிழக மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 2026-27 பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. இது நடப்பு 16-வது சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் ஆகும். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு காலத்தில் 5 பட்ஜெட்கள் அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பான பட்ஜெட், பதிலுரை வழங்கியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியை, அடுத்த 2 மாதத்தில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாக தொடர்வோம். 5 ஆண்டு அனுபவத்தால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்னும் வலிமை பெற்றுள்ளேன். தமிழகத்தை இன்னும் ஏற்றம் பெற வைக்க நம்பிக்கையோடு உழைக்க வேண்டும் எனும் ஊக்கம், வல்லமையும் பெற்றுள்ளேன்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் எனது தொகுதியாகவே நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் செயலாற்றி உள்ளேன். இந்த மிகப் பெரிய வாய்ப்பைத் தந்த தமிழக மக்கள், என்னைத் தேர்ந்தெடுத்து பேரவைக்கு அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி.
கடந்த 2021-ல் பேரவை நூற்றாண்டு விழாவுக்கு வந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்த அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நன்றி. ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களின் சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு, ஆளுநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக அமைதி, கண்ணியம், கட்டுப்பாட்டோடு பேரவையை சிறப்பாக நடத்திய பேரவைத்தலைவருக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் சூழலில் தனது அனுபவத்தாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக்கூடிய அவை முன்னவர் துரைமுருகன் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும். அவருக்கும் எனது நன்றிகள்.
மக்கள் பணியிலும், தேர்தல் பணியிலும் என்னில் ஒரு பாதியாய், இயக்கத்தின் வளர்ச்சிக்கும், ஆட்சியின் சிறப்புக்கும் உறுதுணையாக நிற்கும் துணை முதல்வருக்கும் பாராட்டுகள், நன்றிகள். அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சென்றடைய முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர், அனைத்து துறைகளின் செயலர்கள், காவல் துறையினர் அனைவருக்கும் நன்றி.
குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்துக்கு சிறகுகளைத் தருபவர்கள். அந்த வகையில், அரசுக்கு தக்க யோசனைகள் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையை கடைபிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கும், இதர கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
இந்த 5 ஆண்டுகளில் எனக்கும், என் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்துள்ளேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கிறேன். நாளை நாங்கள் அமைக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். தமிழக மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.