தமிழகம்

சுகாதாரம், கால்நடை துறைகளில் 542 மருத்துவர்கள்: நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: சுகாதாரம், கால்நடைத் துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியத்தின் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் 182 சிறப்பு மருத்துவர்களும், கதிரியக்கவியல் துறையில் 37 சிறப்பு மருத்துவர்களும், தடயவியல் மருத்துவத் துறையில் 24 சிறப்பு மருத்துவர்களும், முதியோர் மருத்துவத் துறையில் 6 சிறப்பு மருத்துவர்களும், இருதய அறுவை சிகிச்சை துறையில் ஒரு சிறப்பு மருத்துவர் என, மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 292 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

          

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்கறிஞர் நிலை-2 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலையில் ரூ.35.45 கோடி மதிப்பில் 59,600 சதுர அடிபரப்பில் தரை மற்றும் 3 மேல்தளங்களுடன் கட்டப்படவுள்ள முன்னாள் படைவீரர் விடுதி மற்றும் பயிற்சி மையத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, செய்தித்துறையின் ‘தமிழரசு‘ சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் “மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-26)” சாதனை மலரையும் முதல்வர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT