தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் சார்பில் கொளத்தூர், ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், துறை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.தர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்களை மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தி.நகர் சட்டப்பேரவைத் தொகுதி, அசோக் நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.12.74 கோடியில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் அசோக் நகர் முதல்வர் படைப்பகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ரூ.16.87 கோடி செலவில் சிஎம்டிஏ சார்பில் அமைக்கப்பட்ட 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.24 கோடியில் முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றையும் திறந்துவைத்து, மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.10 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கம், சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 2,311 குடும்பங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் சார்பில் ரூ.11.88 கோடி செலவில் கொளத்தூர் ராஜாஜி நகரில் 25,500 சதுரடி பரப்பில் 75 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதல்வர் திறந்துவைத்து பார்வையிட்டார்.
மூத்த குடிமக்களிடம் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்வுகளில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.